Monday, July 19, 2010

மணங்களின். ராணி.. ஏலம்..

ஏல டீ..வேண்டுமா?
ஏலக்காய் டீ!..மாலை வேளை.. லேசான மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. என்ன சூட ஒரு டீ இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குமே. ! அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன்.! இந்த குளிருக்கு இதமா இருக்கும். இதெல்லாம் நெசந்தான். ஏலக்காய் டீ நன்றாகவே இருக்கும். ! ஏலக்காயின் மகிமை அப்படி!.ஏலக்காய் மணம் நம்மை கிறங்க அடிக்கும் நண்பா! ரெண்டு ஏலக்காய் விதையை வாயில் போட்டு சுவைத்து இருக்கிறீர்களா..? அனுபவித்து பாருங்கள் நண்பரே..!
மணங்களின் .. ராணி..! ஏல விதைக்குஅதன்சொக்கவைக்கும் மணத்தை முன்னிட்டு, அதற்கு, " சொர்க்கத்தின் தானியங்கள்" என்ற புனை பெயர் ஒன்றும் உண்டு. அதற்குரொம்ப பொருத்தமான பெயர்தான்அது.ஏலம் வாசனைகளின் ராணி எனவும் மதிப்புடன் அழைக்கப்படுகிறது. அதன் வாசனையும் சுவையுமே அலாதியானது. அதனை மிஞ்ச,வேறு மணமே இல்லை உலகில்!. அதனால்தான் அனைத்து இனிப்பு வகைகளிலும் ஏலத்தின் வாசனையே தூக்கலாக உள்ளது. பொதுவாக, ஏலம் இல்லாத இனிப்பு வகையே இல்லை எனலாம். . உலகிலேயே விலை உயர்ந்த வாசனைப் பொருள்களில் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக கருதப் படுவது ஏலக்காய்தான்.
கடல் .. கடந்த.. ஏலம்..!
ஏலத்தின் தாயகம், தென்னிந்தியாவின், மேற்குத்தொடர்ச்சி மலையின் வளம் நிறைந்த கேரளம்தான். இதைதவிர, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது காணப்படுகிறது. ஏலம் முதலில் காட்டு செடியாகவே இருந்தது. ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது.ஏலத்தின் தாயகம் கேரளத்தின் மலைப்பாங்கான பூமிதான் என்று சொல்லப் பட்டாலும் கூட, சுமார், 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை, பெர்சியா, மெசபடோமியா, சீன போன்ற நாடுகளில், இதன் மருத்துவ குணத்துக்காகவும் , சமையலிலும், அதைவிட முக்கியமாக, கடவுள் தொடர்பான சடங்குகளிலும் ஏலத்தைப் பயன்படுத்தினர். கி.மு, 721 ல் பாபிலோனிய அரசனின் தோட்டத்தில், ஏலம் வளர்க்கப் பட்டதாம்.மேலும் கி.பி 176 -180 ல் பேரரசர் அலெக்சாண்டரின் வரிப் பட்டியலில், வாசனைப் பொருளான ஏலத்தின் பெயரும் காணப் பட்டதாம். , .
வேதத்திலும்..கிரேக்கத்திலும்.. ஏலம்.!.
ஆதிகால வேத புத்தகத்திலும் ஏலத்தை பற்றி எழுதி வைத்துள்ளனர் முதலாம் , இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் மற்றும் சுஸ்ருதா என்ற இந்திய மருத்துவர்கள், பல நோய்களை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தியாதாக குறிப்பிட்டு உள்ளனர். ..கிரேக்க மருத்துவத்தில், கி.மு 5 ம் நூற்றாண்டில், ஏலம் பற்றிய தகவல்கள் காணப் படுகின்றன. அரிஸ்டாட்டிலுக்குப் பின் வாழ்ந்த தியோபிரஸ்டேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞன் கி.மு 4 ம் நூற்றாண்டில் ஏலம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.அது மட்டுமல்ல. அதே கால கட்டத்தில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், கிரேக்க, ரோமானிய நிபுணர்களும், ஏலக்காய் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் குறிப்பிட்டு அதன் மருத்துவ குணங்களையும் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் ஏலத்தை வாயில் போட்டு மென்று அதன் மணத்தையும், சுவையையும் அனுபவித்தனராம்.
ஏலத்தின்.. மணத்தில்..சொக்கிய,, உலகப் பேரழகி..!
அலேக்சாண்டரின் போர்வீரகளே, கி.மு 325 ல் இந்தியாவிலிருந்து செல்லும்போது, அப்படியே ஏலக்காயையும்,ஐரோப்பாவுக்கு கொண்டு சென்ற பெருமையைப் பெறுகின்றனர். கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏலத்தை மருந்தாக மட்டுமின்றி, வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர். ஒரு சுவையான,கிரேக்க சாம்ராஜ்யத்தின் தகவல். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு ஏலத்தின் மணம் ரொம்ப இஷடமான ஒன்றாம். , மார்க் ஆண்டனியின் வருகைக்காக, தனது அரண்மனையை, உண்மையிலேயே, நெஞ்சை சொக்க வைக்கும் ஏலத்தின்புகை மணத்தில் மூழ்க வைப்பாராம்.
பைபிளிலும் ... சொர்க்கத்தின்.. மகனுக்கும்.. ஏலம்...!.
இங்கிலாந்து நாட்டினருக்கு நார்வேனியர் மூலம்தான், கி.பி. 11 ம் நூற்றாண்டில்தான் ஏலம் அறிமுகம். இருப்பினும், ஐரோப்பாவுக்கு,கி.பி 17 ம் நூற்றாண்டு வரை, டச்சு , போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் மூலம்தான், ஏலம் இறக்குமதி செய்யப் பட்டது. கிறித்துவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில், இதனை குற்றமற்ற என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தையான, "அமோமன்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கி.பி 1,000 ஆண்டுகளில் சீன அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், தங்களின் பேரரசரிடம் நிற்கும் முன், வாயில் ஏலத்தின் விதையை போட்டுமெல்ல வேண்டுமாம். ஏனெனில், சொர்க்கத்தின் மகன்களின் முன்னே மணம் பரப்பும் வாசனை காற்றை அவர்கள் விட வேண்டுமாம். இது எப்படி இருக்கு,? ஒண்ணுமில்லேப்பா.! அதிகாரியின், வாய் நாறாமல் இருப்பதற்குத்தான் இந்த படாடோபமான ஏற்பாடெல்லாம்..!வாய் நாறினால் பின் எப்படி பேச...! அதான் இது.
நாங்க..இஞ்சி..குடும்பம்தாங்க..!
ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இது வருடம் முழுவதும் காய்க்ககூடியது. வேர்ப்பகுதியில்தான் இதன் பூவும், காயும் காணப்படும். பொதுவாக இது வெப்ப நாடுகளின் நறுமணப் பொருளாக இருந்தாலும், இதற்கு, ஏராளமான மழையும், 22 டிகிரி வெப்பமும் தேவை. அடர்வான மரங்களின் நிழலிலேய இதனை வளர்க்க முடியும்.ஏல செடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 , 000-15 , 000 மீ உயரத்திலேயே ஈரப்பாங்கான பகுதிகளில் வளரும் பயிரிட்டு 4 ஆண்டுகள் ஆன செடிதான் காய்க்கும்.சுமார் 20 காய்கள் வந்த பின் இதனைப் பறித்து சூரிய வெப்பத்தில் உலர வைப்பர்.காய்கள் அழகான இளம்பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த காயில் 10 -20 விதைகள். காணப்படும்.இவை கருப்பாகவும் பிசுக்குத் தன்மையுடனும் இருக்கும். நல்ல தரமான விதைகள் நல்ல கருப்பாக இருக்கும். இன்று ஏலம் இந்தியா தவிர, இலங்கை, தாய்லாந்து, மத்திய அமெரிககா,தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்திலும் பயிரிடப் படுகிறது. ஆனாலும்கூட, இந்திய ஏலம்தான் இதன் ,மணம், தரம், அளவு, எண்ணெய் மற்றும் நிறத்துக்காக உலக சந்தையில் பெயர் பெற்றுள்ளது. மேலும் உலகின் 90 % ஏலம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. அந்நிய செலாவணியைத் தரும் மிக முக்கியமான் பொருள்
அரேபியரின்.. உபசரிப்பு.. ஏலத்தின்,, மதிப்பு...!
ஏலக்காய். கிழக்கிந்தியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் , அரேபியர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கர்கள் தான் ஏலக்காயை அடிக்கடி தங்களின் உணவில் பயன்படுத்து கின்றனர். அரேபியர்களின் காபியில் ஏலத்தின் மணம் கட்டாயம் அருமையாய் இருக்கும். அவர்களின் காபியில் ஏலப் பொடியோ முழு விதையோ நிச்சயமாய் இருக்கும். , ஏனெனில், அவர்கள், விருந்தினரின் முன், ஏலவிதையை, காபி கொடுக்கு முன் காண்பிப்பதை பாரம்பரிய வழக்கமாகவும், அவர்களுக்கு தரும் உயர்ந்த பட்ச மரியாதை என்றும் கருதுகின்றனர்.அரேபியர்கள் மாமிசத்திலும் , அரிசி சோற்றிலும் ஏலம் போடுவார். இன்றும் கூட சில முகமதியர்கள் வீட்டில் சாதம் சமைக்கும் பொது ஏல அரிசியும் கலந்து போடுவார்கள். இந்திய உணவில் ஏலம் கலப்பது சாதாரணமான ஒன்று. புலவு, மசாலா, ஆட்டுக் கறி பாயசம், அல்வா, குலாப் ஜாமூன் மற்றும் பிற இனிப்பில் ஏலத்தின் வாசனை தூள் கிளப்பும்
மருத்துவ ..குணம் கொண்ட.. ஏலக்காய்...!
ஏலம் பல வகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் அற்புதமான உணவு மதிப்பு கொண்டது. இதில் மிகக் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும், முக்கிய வைட்டமின்களாகிய A ,B& C உள்ளன. 10% ஆவியாகக்கூடிய எண்ணெய் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான, அரேபியா,துருக்கி போன்றவைதான் உலகின் அதிகமான ஏலம் உட்கொள்பவர்கள். வடஇந்திய கிராமிய பாடல்களிலும் கூட, வெற்றிலை பாக்கில் ஏலம் கலப்பது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏலம், குடல், சிறுநீர், நரம்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய்களை நிவாரணம் செய்யுமாம்,
!தங்கத்தில்.. குளித்த.. ஏலக்காய்...!.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும், தைத்திரிய சம்ஹிதாவிலும் திருவிழா காலத்திலும், சடங்குகளிலும் ஏலம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதைவிட ஒரு சுவாரசியமான தகவல். இந்தியர்கள், தங்களின் விருந்தினர்களுக்கு மிகுந்த மரியாதை செய்வதற்காக, ஏலக்காயை தங்கத்தில் முக்கி எடுத்து அதனை, இனிப்பின் மீது வைத்து பரிமாறுவார்களாம். 1801 ல் இந்தியாவிலிருந்து, கிழக்கிந்திய கம்பெனியால் , இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப் பட்ட தங்கத தகடு போர்த்திக் கொண்ட ஏலக்காய்கள் இவை. இவற்றை இந்தியா அருங்காட்சியம் என்ற பெயரில் இந்தியா இயற்கைப் பொருள்களை இங்கிலாந்தில் . வைத்திருந்தனர். . 1879 , ல் அங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டதால், அதனை லண்டன் அருங்காட்சியகத்துக்கும், ராயல் தாவர தோட்டத்திற்கும் மாற்றப்பட்டது. பின்னர், இவை தென் ஆசியா கடந்து, சீனா தாண்டி உலகம்
முழுமைக்கும் விரவிக் கிடக்கிறது. எம் சொத்து கொள்ளை கொண்டு போகவோ என்று நாம் அலறவேண்டிய்துதான். வேறென்ன செய்ய?





ஏலச் செடியின் பூவும் காயும்
அடித் தண்டில் பூவும், காய்களும்.
பழங்கால புத்தகத்தில் ஏலம் பற்றிய சமையல் குறிப்பு
தங்கத்தில் குளித்த இந்திய ஏலக்காய்
கொத்து கொத்தாய் ஏலக்காய்

No comments:

Post a Comment