Monday, December 12, 2011

நிலவோடு புவி இன்று( டிசம்பர் 10 ) விளையாடுதே..!

நிலவோடு புவி இன்று ( 2011 ,டிசம்பர் 10 ) விளையாடுதே..!

by Mohana Somasundram on Friday, December 9, 2011 at 1:08pm

இந்த ஆண்டின் கடைசி கிரகணம்.. முழு சந்திரகிரகணம்..2011 , டிசம்பர் 10

நிலவோடு புவி இன்று( டிசம்பர் 10 ) விளையாடுதே..!

நண்பர்களே... !நாம் தினமும் வானில் சூரியன்,சந்திரன்,விண்மீனகள் வருவதை அதன் நகர்வுகளைப் பார்த்து மகிழ்ந்து பதிவும் செய்கிறோம். ஆனால் இவர்களுடன் பூமியும் இணைந்து ஓடிப் பிடித்து விளையாடும் நிகழ்வு வருடத்தில் ஓரிரு நாட்கள்தான் நடக்கின்றன.அப்படி ஓர் அற்புதமான தருணத்தை..அரிய வான்காட்சியை, வான் நிகழ்வை. , 2011 , டிசம்பர் 10 ம் நாள், சனிக்கிழமை அன்று சந்திக்கப் போகிறோம். அப்போது பூமியும் நிலவும் ஓடிப்பிடித்து விளையாடும் அற்புதத்தை நாம் கண்டு, ரசித்து படம் பிடித்து மகிழலாம்., சனிக்கிழமை அன்று இந்த ஆண்டின் கடைசி விளையாட்டை நிகழ்த்தும் சந்திரகிரகணமும் நம்மைச் சந்திக்க காத்திருக்கிறது. இந்த சந்திர கிரகணம் , டிசம்பர் 10 ம் நாளான்று, சுமார் 5 மணி நேரம் இரவு வானில் அற்புதமாகத் தெரியும்.

இந்தியா,அலாஸ்கா, வட கனடா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நி்யூசிலாந்து, மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய, நாடுகளில் இந்த முழு சந்திரகிரகணத்தைக் காணமுடியும்.மத்திய ற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ளவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். இவர்கள்தான் இதனை அற்புதமாக படம் எடுக்க முடியும். வட அமெரிக்க மற்றும் ஹவாய் தீவுகளில் உள்ளவர்கள் கிரகணத்தை காலையில் சந்திரன் மறையும் வரை காண்பார்கள். இந்த டிசம்பர் 10ம் நாள் நடைபெற உள்ள விந்தைமிகு வானின் விளையாட்டை,உலகின் 1,50௦ கோடி மக்கள் கண்டு களிக்க முடியும்.இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் எந்த வித பாதுகாப்பு கவசமும் இன்றி பார்க்கலாம் . கண்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

முழுக்கிரகண நீட்டிப்பு.நேரம்..!

இந்தியாவில் உள்ளவர்களுக்கு இந்த முழு சந்திர கிரகணம் நமது கண்களுக்கு ஓர் அருமையான வான்வெளி விருந்தாகும். இந்த விருந்தை இந்தியாவில், சுமார் 51 நிமிடங்கள் முழு கிரகணத்தை உங்களின் கண்களால் ஆசை தீர பருகலாம்.ஆனால் கிரகணம் நீடிப்பது சுமார் 5 மணி நேரமாகும்.இந்த ஆண்டின் கடைசி கிரகணமும், இந்த ஆண்டின் சந்திர கிரகண எண்ணிக்கையில் இரண்டாவது கிரகணமும் இதுவே. சென்ற ஆண்டும் இதே போலவே, சரியாக ஓர் ஆண்டுக்கு முன் ஒரு முழு சந்திர கிரகணம் 2010 ,டிசம்பர் 20ல், மிக நீண்ட இரவு நாளன்று ஏற்பட்டது.. .அடுத்த சந்திரகிரகணம் 2014,ஏப்ரல், 14-15 ல்தான் நிகழும்.வட அமெரிக்க மக்கள் இதனை முழுமையாக காண்பார்கள். ஆனாலும் கூட இந்தியாவில் அனைவரும் பார்க்க முடியாது.

கிரகணம் என்றால் என்ன?

பொதுவாக ஓர் ஆண்டில் 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டில்4பகுதி சூரியகிரகணங்களும் ,2 முழு சந்திர கிரகணங்களும் ஏறபட்டுள்ளன.கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு எனபது பொருளாகும்,எக்லிப்ஸ் என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள்,வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. சூரிய கிரகணம் என்பது, அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் உண்டாகிறது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றுக்கும் இடையிலுள்ள கண்ணாமூச்சி விளையாட்டு ஆகும்.சூரிய கிரகணத்தின் போது சூரியன் மறைக்கப்பட்டு கொஞ்ச நேரம் காணாமல் போகிறது.. கடந்த ஆண்டில், ஏற்பட்ட 6 கிரகணங்களில் , 4 பகுதி சூரிய கிரகணம். மீதி 2 சந்திர கிரகணம். ஆனால் இதே போல் 2009 ஆண்டும், 6 கிரகணங்கள் ஏற்பட்டன. ஆனால் அவை 2011 ம் ஆண்டு கிரகணங்களின் உல்டாதான்.. அவற்றில் 4 சந்திர கிரகணம். மீதி இரண்டும் சூரிய கிரகணங்கள். இந்த ஆண்டு ஏற்பட்டது போலவே, 21 ம் நூற்றாண்டில் 6,முறை இதே போல 4:2 விகிதத்தில் ( 4 சந்திர கிரகணம்.:இரண்டு சூரிய கிரகணங்கள்) ஏற்பட உள்ளன. அவை 2011 , 2029 , 2065 , 2076 & 2094 வருடங்களில் உண்டாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது..இப்படிப்பட்ட நிகழ்வில் எப்போதும் ஜனவரியில் முதல் கிரகணமும், டிசம்பரில் கடைசி கிரகணமும் உண்டாகும்.

கிரகணத்தில் சிவக்கும் சந்திரன்..!

இப்போது உருவாக உள்ள சந்திர கிரகணம் மையக்கோட்டில் நிகழவில்லை. ஆனால் முழுமறைப்பு/முழுக்கிரகணத்தின் காலக்கெடு.. 51 நிமிடங்கள். . இனி இதைப் போனற நீண்ட முழு சந்திரகிரகணத்தைக் காண இன்னும் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆம். அடுத்த முழு சந்திர கிரகணம் இந்தியா முழுமைக்கும் அனைவரும் பார்க்கும்படி நிகழும் ஆண்டு 2018.,ஜூலை 27 .. அதன் முழு மறைப்பு நேரம் 103 நிமிடங்கள். அதனால் விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும், வான்நோக்கர்களும் ஆவலுடன்,புவியின் தொடலால் நாணிச் சிவந்த சந்திர பிம்பம்/முகத்தைக் காண, காணொலி மற்றும் படம் பிடித்து படம் காட்ட பல்வகை ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளனர். இந்த முறை அவ்வளவாக் கருப்பாக இல்லாமல் சிவந்து செம்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டு ஜொலிக்குமாம். பார்த்து ரசியுங்கள் நிலவின் பேரழகை..! என்ன விலை அழகே.. உன்னை பட்ம் எடுத்து மகிழ்வேன் என்று பாடுங்கள்.

கிரகண நேரம்..!

இந்தியா முழுமைக்கும், சந்திரன் முழு நிலா நாளான, டிசம்பர் 10 ம் நாள், சமார் 5மணிநேரம் புவியின் நிழல் மறைவில் தன்னை மறைத்து தொட்டுப் பிடித்து விளயாடிக் கொண்டிருக்கும். இந்த தொடல்/தழுவல் விளையாட்டுத் துவங்கும் நேரம், மாலை மணி 6.15.சந்திரன் முழுமையாக பூமியின் நிழலில் தன்னை ஒளித்துள்ள நேரம் துவங்குவது இரவுமணி:7.35 . இந்த மறைப்பு விளையாட்டு 8.28 மணிவரை நீடிக்கும். புவியின் நிழல் சந்திரனை பகுதியாக மறைப்பது முடியும் நேரம். இரவு மணி. 9.48 . ஆனால் சந்திரன் பூமியின் நிழல் மறைப்பில் முழுமையாக இருட்டாக/கருப்பாகத் தெரியும் கால நேரம், நம இந்திய நேரப்படி மணி 8.27 க்குத்தான்.

சந்திர கிரகணம் துவங்கும் & முடியும் 7 நிலைகளாவன:

1. சந்திரன் பெனும்பரா ( penumbra)என்னும் அரி நிழலில் நுழையும் நேரம் மாலை: 17:03: 3

2. சந்திரன் அம்பரா (umbra) என்னும் கருநிழலில் நுழையும் நேரம்: மாலை:18:15:13

3. சந்திரனின் முழுமறைப்பு/முழுக் கிரகணம் (totality) துவங்குதல்:இரவு 19:36. 29

4. கிரகணத்தின் முழுமை நேரம் (maximum eclipse ): இரவு 20:01:50

5. முழுமறைப்பு/முழுக் கிரகணம் முடிவடையும் நேரம்: இரவு 20:27:16

6. கருநிழலிருந்து (umbra) சந்திரன் வெளியே தலைகாட்டும் நேரம்: இரவு: 21:48:09

7. அரிநிழலிருந்து ( penumbra) சந்திரன் முழுமையாக வெளிவரும் நேரம்:இரவு: 22:00:12

ஒளி மங்கும் நிலா..!

டிசம்பர் 10 ,முழு கிரகணம் நிகழும் நேரத்தில் நிலா, வானின் உச்சிக்கு வந்து கொண்டிருக்கும்.பூமியின் நிழலில் நிலா ஒளிந்துள்ளபோது நிலவின் ஒளி அவ்வளவாக இருக்காது. மேலும் முழு சந்திர கிரகண நிலா,, நாணிச் சிவந்தது போய் இருக்கும். கர்ணன் படத்தில் வரும் நாணிச் சிவந்தன மாதர்தம் கண்கள் என்ற பாடல் இங்குதான் பொருந்துமோ.?அப்பாடா ஒருவழியாக சந்திர கிரகணம் முழுமையாக பார்த்து முடித்து விட்டது போன்ற் உணர்வு ஏற்பட்டு விட்டதா? அந்த நிறைவினை நேரில் பார்த்து மகிழுங்கள் நண்பா..!

சுற்று..சுற்றல்..அனைவரும்..சுற்றல்.!

சூரியன், பூமி, சூரியனை வலம் வரும் 8 கோள்கள், அவைகளின் துணைக்கோள்கள், குள்ளக் கோள்கள், அவைகளைத் தாண்டி இருக்கும் குயூப்பியர் வளையம், அதற்கு அப்பால் உள்ள ஊர்ட் மேகம்., அவற்றிலிருந்து உரு எடுத்து சுற்றும் வால்மீன்கள் என இவ்ளோ..பேரை உள்ளடக்கியது நம் சூரிய குடும்பம். இந்த குஞ்சு குளுவான்கள் படை சூழ சூரியன் தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. ஆனால் இந்த சூரிய குடும்பம், பால் வழி மண்டலத்தில்(milky way galaxy) ஒரு சிறு மணல் துகள் அளவுதான். இந்த துகள் ஒரு முறை பால்வழி மண்டலத்தைஒரு முறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம். 22 1/2 கோடி ஆண்டுகள். அது மட்டுமல்ல. இந்த நிகழ்வினை ஒரு பிரபஞ்ச ஆண்டு என்று சொல்கிறோம். சாதாரணமாய் பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 நாட்களில் சுற்றுகிறது நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள் இந்த் அழகிய காட்சியினை..!.

சந்திர கிரகணம் நிகழுமிடம்..!

இந்த முழு சந்திர கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. மேஷ் ராசி என்றதும்,சோசியத்துக்கு ஓடிவிடவேண்டாம். சந்திரன் மேஷராசி விண்மீன் படலத்தில் (Taurus constellation) காணப்படுகிறது.அதுவும், குளிர்கால முக்கோணம் எனப்படும் விண்மீன் கூட்டங்களுக்கு மத்தியில் அழகாக காட்சி அளிக்கிறது. குளிர்கால முக்கோணத்தில் முக்கியமாக, மேஷராசியின் சிவந்த செம்பூத விண்மீனான ரோகிணி, வேட்டைக்காரன் விண்மீன் படலத்தின் திருவாதிரை, போன்றவை அருமையாய் தெரியும். பொதுவாக, முழு நிலா நாளில், சந்திரன் வெண்பளிங்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பதால், அருகிலுள்ள விண்மீனகள், அதன் ஒளியில் ஒளிந்து கொள்ளும். இப்பொது சந்திரன் இருண்டு, ஒளி மங்கி காண்ப்படுவதால், அனைத்து விண்மீனகளையும், வேட்டைக்காரன் விண்மீன் படலத்தோடு இணைந்து காணப்படும் பால்வழி மண்டலத்தையும் காண முடியும்.

பிரபஞ்சத்தில்..அனைத்தும்..சாய்வே..!

பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியனும் கூட 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரன், 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. எனவே பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவதுதான் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, அவைகளில் ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுவே கிரகணம் ஆகும்.. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சூரியன்,பூமி, சந்திரன் மூன்றும் தன் அச்சில் வெவ்வேறு பாகையில் சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும்/ அமாவாசை தினத்திலும் கிரகணம் ஏற்படுவதில்லை.

ஏன் சூரியன், சந்திரன் ஒரே அளவில்..!

நமது தாயான சூரியன் ரொம்ப ரொம்ப பெரிசு.சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு.குட்டியூண்டு.புள்ளி.. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து,முழுங்கி,கபளீகரம் செய்து முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான்.

கிரகண நேர நிர்ணயிப்பு..!

பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, அதன் எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 5 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுகிறது. சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.. இம்முறை நிகழ்வுள்ள கிரகணமும் அத்தன்மைத்தே..!இப்போது நிகழவுள்ள சந்திர கிரகணம்.. ௧௩௫ வது சாரோஸ் வகையைச் சேர்ந்தது.

கிரகணத்தின் வரலாறு..!

ஏதேனியர்கள் போரில் தோல்வி

records of eclipses which took place thousands of years ago. This bit of cunieform speaks the history of eclipse

பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர்.முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் அவர்கள் விட்ட புருடாவை..நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் (Athenians) வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றா..மதகுருவின் சொல்படி ஏதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

கிரகணத்தில்.நம் கோயில்கள்..!

இப்படி பல்வேறு கதைகளும் சரித்திரங்களும் நடந்தது பழங்காலத்தில் என்றால், தற்போது நவீன முறையில் மூடநம்பிக்கைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த சந்திர கிரகணத்தின் போது டிசம்பர் 10 ம் நாள், சபரி மலையில் மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை, இரண்டு மணி நேரம் ஐயப்பசுவாமி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரகணம் முடிந்து பரிகாரம் நடத்திய பிறகு மீண்டும் நடை திறக்கப்படுமாம் . அன்று ஒரு நாள் மட்டும் புஷ்பாபிஷேகம் நடைபெறாதாம்.அது என்ன இரண்டு மணி நேரம் என்பது என்று தெரியவில்லை. கிரகணம் ஐந்து மணி நேரம் அல்லவா? திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோயில், திருப்பதி பாலாஜி கோயில் என அனைத்து கோயில்களின் கதவுகள் மூடப்படுகின்றன. அது சரி..கிரகண காலத்தில் வானிலிருந்து யாராவது ந்ஞ்சை, அனைத்துக் கோயில்கள் மேலும் கொட்டுகிறார்களா? கிரகணத்துக்கு கடவுள் எதிரியா/பிடிக்காதவரா? என்ன நடக்கும் கிரகணத்தின் போது என்பது முழுமையாகத் தெரிந்தும், எப்போதும் மக்களை ஏதாவது ஒரு வகையில் மூடராக வைத்திருக்கவே..ஒரு பகுதியினர் விரும்புகின்றனர்.

சோதிடர்கள் அறிவிக்கும் தகவல்:

“டிச., 10ல் முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும்.முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும். சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்”.என இடைவிடாமல் ஜபிக்கின்றனர்.

கிரகணங்களும்,..ஊடகங்களும்..அறிவியல் மையங்களும்..!

மேலே குறிப்பிட்ட தகவல் இரண்டும் நாளிதழ்களில் வந்தவைதான்.கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு கட்டு கட்டாய், அறிவியலில் தோய்த்து அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார். இது எப்படி இருக்கு? அது கூட பரவாயில்லை. வானுக்கு விண்கலத்தை அனுப்பி, அறிவியலை ஆராயும்,பணியைச் செய்யும் இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, சூடம் ஏற்றி, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இப்படி ஒரு கும்பலும் அறிவியல் தளத்தில் அறிவியலுக்குப் புறம்பாய் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை அறிவு சால் மக்கள் அறியவேண்டியது காலத்தின் கட்டாயம். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?

அடுத்த ஆண்டு. நிகழ உள்ள கிரகணங்கள்:

  1. 2012 ,மே 20, வளைய சூரிய கிரகணம்.
  2. 2012 , ஜூன் 04,பகுதி சந்திர கிரகண்ம்
  3. 2012 ,நவம்பர் 13, பகுதி சந்திர கிரகணம்.
  4. 2012 ,நவம்பர் 28 பகுதி சந்திர கிரகணம்.


Saturday, November 12, 2011

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

by Mohana Somasundram on Saturday, October 29, 2011 at 11:53pm

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

சுடச் சுட ஓரு தகவல்..!

நல்ல நாளும் அதுவுமா என்ன இப்படி ஒரு தலைப்பு அபசகுனம் மாதிரி என்கிறீர்களா? நண்பா இது அபசகுனம் இல்லை. அறிவியல்.. அறிவியல் கண்டுபிடிப்பு. அதான். போட்டேன். தில்லிக்கு ராசா ஆனாலும் தாய்க்கு பிள்ளைதானே.. ! அது போல, இறந்துவிட்டாலும் கூட, தாய் தாய் தானே..! அவரை விட்டுவிட்டு வர மனசின்றி முடியவும் முடியாமல் அந்த பிள்ளைகள் அவரையே சுற்றி வருகின்றனர். சுவாரசியமான விஷயமல்லவா? அப்படி ஒரு கூட்டத்தை நம் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. அதுவும் இரண்டு நாளைக்கு முன்புதான். சுடச் சுட ஓர் அறிவியல் தகவல் சுவையாக உங்களைச் சந்திக்கிறது.

இறந்த விண் மீனைக் கண்டறிந்த தொலை நோக்கி..!!

(Hobby-Eberly Telescope (HET)

இறந்த 3 தாய் விண்மீன்களைச் சுற்றி வரும் மூன்று கோள்களை நமது சர்வதேச வானியல் ஆராய்ச்சியின் குழு கண்டுபிடித்து,உள்ளது. . இவர்கள் பென் மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளியாளர்கள். இந்த தகவலை இவர்கள் 2011,அக்டோபர் 27 ம் நாளில் இதனைப் பற்றிய தகவல்களை வெளியில் அறிவித்துள்ளனர் .இவற்றை எல்லாம் இந்த ஆராய்ச்சிக் குழு ஒரு தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே. அந்த தொலை நோக்கியின் பெயர் ஹாபி எபெர்லி தொலைநோக்கி(Hobby-Eberly Telescope (HET) ).

ஹாபி எபெர்லி தொலைநோக்கி..!

ஹாபி எபெர்லி தொலைநோக்கி (Hobby-Eberly Telescope (HET) ) என்பது உலகத்தின் நான்காவது பெரிய தொலைநோக்கி.இது மெக்டொனால்டு பார்வையகத்தில்/நோக்ககத்தில் (McDonald Observatory) அமைந்துள்ளது . டெக்சாஸ் லெப்டினன்ட் கவர்னர் பெயர் மற்றும் ராபெர்ட் E.எபெர்லியின்பெயர்களை (Texas Lieutenant-Governor Bill Hobby and for Robert E. Eberly, a Penn State benefactor.) இணைத்து இதற்கு சூட்டியுள்ளனர். 1997 லிருந்து இந்த தொலைநோக்கி செயல்படுகிறது.இதனை பென் மாநிலம், டெக்சாஸ் பலகலைக்கழகம்,ஸ்டேன்போர்ட் பலகலைக்கழகம், லுட்விக் பல்கலை, மூன்சென் பல்கலை மற்றும் கோயட்டின்ஜென் பல்கலை (collaboration between Penn State and the University of Texas at Austin, Stanford University, Ludwig-Maximilians-Universitaet Muenchen, and Goerg-August-Universitaet Goettingen) என அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல் பட்டு வானை தன் நுண் கண்களால் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இணைப்புகளுள் பென் மாநிலம்தான் அதிக ஈடுபாட்டுடன் இதில் செயலாற்றுகிறது.

திறமைசாலி..தொலைநோக்கி.!

ஹாபி எபெர்லி தொலைநோக்கியில், ஒளி வரும் துளையின் விட்டம் 9 .2 மீட்டர். ஒளி பிரதிபலிக்கும் ஆடியின் அளவு 9 .2 மீட்டரைவிட அதிகம். இதில் முதன்மை ஆடியில் 91 அறுகோண கண்ணாடிகள் உள்ளன, ஒளி பிரதிபலிக்க.இந்த ஹெட்(HET) தொலை நோக்கியின் அடிப்பகுதி அப்படியே, 70- 81 பாகை வட்டமடித்து வானை ஆராயும் . அப்போது இதுவரை நமக்குத் தெரியாமல் விண்வெளியில் வலம் வரும் பல விண்மீன்கள், அவைகளின் புதல்வர்களான கோள்கள் மற்றும் புதிய அண்டங்கள் போன்றவற்றை சல்லடை வலை போட்டுத் தேடிக்கொண்டிருக்கின்றன. சுமார் நொடிக்கு ஒரு மீட்டர் சுற்று வேகத்தில் நகரும் விண்மீன்களைக்கூட துல்லியமாய் கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது இந்த தொலைநோக்கி. இதுவரை அவற்றில் பல விண்மீனகளை கண்டுபிடித்துள்ளது. அந்த வலையில் சிக்கிய மீன்கள்தான் அக்டோபர் 27 அன்று அறிவிக்கப்பட்ட. இறந்து போன மூன்று விண்மீன்களும், அவற்றைச் சுற்றிவரும் மூன்று கோள்களும்.

கண்டு பிடிச்சோம்..கண்டு பிடிச்சோம்..!

அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டமூன்று புதிய கோள்களும் சுற்றி வரும் தாய் விண்மீனின் பெயர்கள்: HD 240237, BD +48 738, & HD 96127 -என்பதாகும். இவை நம் சூரிய குடும்பத்திலிருந்து பல பத்து ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.இதில் உள்ள வியப்பு, ஆச்சரியம், அதிசயம் தரும் விஷயம் என்னவென்றால் இவற்றில் ஒன்று மிக மிக அதிக நிறை உள்ளது மற்றும் அது இறந்த விண்மீனாகும் . இதனை அந்த குழுவின் தலைவரான அலெக்ஸ் வோல்ஸ்க்சான் ( Alex Wolszczan, an Evan Pugh Professor of Astronomy and Astrophysics at Penn State) என்ற வானவியல் பேராசிரியர்தான் கண்டுபிடித்தார். இவர்தான் முதன் முதல் 1992 ல் வானில் சூரிய மண்டலத்திற்கு வெளியே சுற்றிவரும் வெளிக் கோள்களைக் கண்டுபிடித்தவரும் கூட. இந்த இறந்த விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்கள் நமக்கு பல எதிர்கால கனவுகளை, திட்டங்களை, புதிய வானியல் ஆராய்வ்ச்சிக்கு தடம் போடும் என்று தெரிய வருகிறது. இப்போது இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த புதிய கோள்கள், அவற்றை பற்றிய புதிய ஆராய்ச்சிக்கு நிறைய வழி வகை செய்துள்ளன. இது உலோகங்கள் எவ்வாறு இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை வானவியலாளர்கள் அறிந்து கொள்ளவும் பெரிது உதவுகின்றன.

. வெளிக் கோள்களின் (Exo -Planets ) புதிய பரிமாணம் ..!

இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த கோள்களின் மண்டலம், நம் சூரிய குடும்பத்தை விட அதிகமான பரிணாமமும், பரிமாணமும் பெற்றது என தெரியவந்துள்ளது. "இந்த மூன்று விண்மீன்களும், ஏற்கனேவே தன்னிடமுள்ள ஆற்றலை எல்லாம் இழந்துவிட்டு, சிவப்பு அரக்கனாக உருமாறிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் இது தன்னருகே சுற்றி வரும் கோளை கபளீகரம் செய்துவிடும்", என வோல்ஸ்க்சான் கூறியுள்ளார். நமது சூரிய மண்டலத்தில் நம் சூரியனுக்கு என்ன நிகழும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ/ எதனைச் சந்திரசேகர் சொன்னாரோ அதுவே இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களின் தலையெழுத்தும் என்றும் சொல்கிறார் வோல்ஸ்க்சான். நம் சூரியனும் எதிர்காலத்தில், தன் ஆற்றலை எல்லாம் இழந்து அதன் பூத உடல் ஊதிப் போய் சிவப்பு அரக்கனாக ஊதி ஊதி விரியும். அது சமயத்தில் நம் பூமியையும் கூட விழுங்கி விட நேரிடும். நண்பா அதற்காக இப்போதே பயப்பட வேண்டாம். அது நடக்க இன்னும் 600 கோடி ஆண்டுகள் ஆகும். இதனை நான் மட்டும் சொல்லவில்லை. பேராசிரியர் வோல்ஸ்க்சானும் இதையேதான் சொல்கிறார்.

பழுப்புக் குள்ளனா..?

இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களில் ஒன்று பெரியது; அதிக நிறையுள்ளது மட்டுமல்ல. இதற்கு நம் வியாழன் அளவு பெரிய கோள் உள்ளதுதான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல அதன் அருகில் இரண்டாவது ஒரு புதிரான பொருளும் காணப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக் குழுவின் கணிப்புப் படி, இந்த பொருள் வேறொரு கோளாகவும் கூட இருக்கலாம்.அல்லது இது குறைவான நிறையுள்ள விண்மீனாவோ இருக்கக் கூடும் என்று இந்த வானியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அல்லது நம் வானியலாளர்களுக்கு மிகவும் சுவாரசியமான பழுப்பு குள்ளனாகவும் கூட இது இருக்கலாம் என்று நினைக்கின்றனர். இந்த பழுப்புக் குள்ளன் என்பது, விண்மீன் போன்ற வான்பொருள் ஆனால் இது மிகமிகக் குளிர்ந்த விண்மீன்களுக்கும், அசுரன் விண்மீன் களுக்கும் இடைப்பட்ட வான்பொருளாகும். நாங்கள் தொடர்ந்து இந்த வான் பொருளைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்போம், இன்னும் சில வருடங்களில் இவர் யார் என்பதும் இவரைப் பற்றிய முழு ஜாதகத்தையும் நாங்க புட்டு புட்டு வைப்போம், அதன் முழு வண்ணமும் அடையாளமும் தெரிந்துவிடும்.. என்று சர்வதேச வானியல் ஆராய்ச்சி குழுவின் தலைவர் வோல்ஸ்க்சான் அறுதியிட்டுத் தெரிவிக்கிறார்.

ஓயாத இரைச்சல்..!

வோல்ஸ்க்சான் இன்னும் சில சுவையான தகவல்கள் தருகிறார். என்ன தெரியுமா? இந்த மூன்றுவிண்மீன்களும் சண்டைபோடுவது போல ரொம்பவும் சத்தம் போட்டுக கொண்டிருந்தவனாவாம். நம் சூரியனைவிட அதிக ஜொலிப்புடனும் , ரொம்பவும் ஆட்டம் போட்டு ஆடிக் கொண்டும் இருந்தனவாம். இந்த சத்தம் இவர்களை அதிகமாக கவனிக்க விடாமல் தடுத்தனவாம்.நம் வீட்டுக் குட்டிகள் போடும் கும்மாளம் போல. ஆனால் பிரச்சினைகளுக்கும் மேல் ஒரு சவாலாகத் தான் இறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறை அதிகமுள்ள விண்மீன்களையும், அவற்றை சுற்றி வரும் புதிய கோள்களையும், அவற்றைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் மிகப் பெரிய சாதனைதான். இவற்றை எல்லாம் சூரியக் கதிர்களின் ஒளிவண்ணப் பட்டையைப் பிரித்து பதிவு செய்யும் நிழற்படக் கருவி(spectrographs) மூலமே கண்டறியப்பட்டது.

மலை முழுங்கி மகாதேவன்..!

இந்த குழு வேறொரு இறுதி முடிவையும் கூட செய்தது.. அதுதான் இன்னும் ஆச்சரியமான, சுவாரசியமான தகவல். இந்த மூன்று விண்மீன்களுக்கும் அவைகளின் சுற்றுப் பாதையில் நிறைய கோள்கள் இருந்திருக்கலாம். அவற்றை எல்லாம் இவை, மலை முழுங்கி மாகாதேவன் போல காலப்போக்கில் எல்லாவற்றையும் விழுங்கி விட்டன. இப்போது நமக்குத் தெரியும் ஒன்றை மட்டுமே தற்சமயம் பாக்கி வைத்துள்ளளது என்று கருதுகின்றனர். இபோது காணப்படும் கோள்களும் கூட தனது தாயிடமிருந்து சுமார் 0.6 வானியல் அலகு தொலைவில்தான், அதாவது 9 கோடி கி.மீ தூரத்தில்தான் சுற்றுகின்றன, என்ற தகவல்களையும் தெரிவிக்கிறார்.வோல்ஸ்க்சான். இந்த 0.6வானியல் அலகு என்ற மாய எண் கோள்களை விழுங்கும் தொலைவாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார் வோல்ஸ்க்சான்..

மிச்ச சொச்சமான கோள்...!

இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மற்றும் அதன் கொலைகளைப் பற்றி அறியும் தகவல்கள் நமது சூரிய குடும்பத்தின் தலைஎழுத்தையும் கூட துல்லியமாய் தெரிவிக்கும் என நம்புகின்றனர். அது மட்டுமல்ல எப்படி நம் சூரியன் எதிர்காலத்தில் புதன், வெள்ளி, நம் பூமி, அதன் துணைக்கோளையும் கூட விழுங்கிவிடும். இன்னும் 100 -200 கோடி ஆண்டுகளில் நாம் தவிர்க்கவே முடியாதபடி, அழகான பெருங்கடல்கள் நிரம்பிய வியாழனின் துணைக் கோளான யுரேபாவில்(Jupiter's moon, Europa,) இடம் தேடிச் சென்றிருப்போம். இந்தக் கதையும் கூட அடுத்த 200 கோடி ஆண்டுதான். அப்புறம் யுரேபாவும் உருகி ஊற்றி காணாமல் போய் விடுமே.

எதிர்காலம் கணிக்க மாநாடு..!

இறநது கொண்டிருக்கும் விண் மீன்கள் பற்றியும், அவற்றின் முடிவு/தலைவிதி பற்றியும், இந்த மாதிரி தகவல் மற்றும் வெளிக் கோள்களின் வாழக்கூடிய உலகங்கள் பற்றியும் . அறிவதற்காக ஒரு வானியல் ஆராய்ச்சி மாநாடு பியுர்டோ ரிக்காவில்,(Puerto Rico ) வரும் 2012 ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு என்ன நடக்கும் என்பதையும் பற்றிய எதிர்காலத் தேடல் தொடர்பாய் தகவல்கள் பரிமாறப்படும். மேலும் அங்குள்ள ௧௦௦௦ அடி ஒரு ரேடியோ தொலைநோக்கி மூலம் அறிய உள்ள , மூன்று கோள்கள் அவைசுற்றிவரும் , வெகு வேகமாய் சுற்றிக் கொண்டிருக்கும் நியூட்ரான் விண்மீன் பற்றியும் பேசப்படும். இவை பல புதிய கோள்கள் உருவாக்கம் மற்றும் புதிய அண்டம், பிரபஞ்சம் முழுமையும் பற்றி அறிய புதிய கதவைத் திறந்து வைக்கும்.

உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் ..தப்புட்டி பெலாட்டிகல்லிம் (Thapputi -Belatikallim )..!

உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் ..தப்புட்டி பெலாட்டிகல்லிம் (Thapputi -Belatikallim )..!

by Mohana Somasundram on Saturday, November 5, 2011 at 1:19am

தப்புட்டி

அனைத்துமான வேதியல்..!

வேதியல் என்பது வாழ்வில் சுவையான ஓர் அத்தியாயம். அதனை தவிர்த்து நாம் வாழ இயலாது என்பது தெரியுமா..நண்பரே..!உங்கள வாழ்வின் ஒவ்வொரு துடிப்பிலும், ஒவ்வொரு செயலிலும் வேதியல் ஒன்றிப்போய் இருக்கிறதே..! யார் வாழ்க்கையானாலும் சரி, அண்டம் முதல், அமீபாவரை என்றாலும் சரி..! அமீபா முதல் ஏழாம் அறிவு வரை என்றாலும் சரி..! வேதியலின்றி, அதன் வினைச் செயல்பாடுகள் இன்றி, அவற்றைச் சந்திக்காமல் நாம் வாழவே முடியாது, அது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும்..கூட! பிரபஞ்சத்திலிருந்து, நம் உடலில் உள்ள அனைத்து செல்களிலும், உண்ணும் உணவிலும், பார்க்கும் கல், மண்ணிலும் வேதியியல் ஊடுருவி நிற்கிறது. நம் வாழ்வில் அனைத்துப் பொருட்களிலும் வேதியல் இரண்டறக் கலந்திருக்கிறது. அவனன்றி அணுவும் அசையாது எனற பழமொழியை மாற்றிப் போடவேண்டும். வேதியல் இன்றி அணு அசையாது என்பதுதான் உண்மை.பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் இயற்பியல்,வேதியல் மற்றும் கணிதம் கலந்தே உள்ளது.

புகை வழியே மணம்..!

வேதியலின் துவக்கம் நறுமணத் தைலமாக/அழகுசாதனப் பொருட்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கணிப்பு. நறுமணத் தைலத்திற்கு பர்பியூம் (Perfume) என்பது ஆங்கிலப் பெயர்.இந்த வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் புகையின் வழியே ("through smoke") என்பதே. ஏனெனில் துவக்க காலத்தில் வாசனை மிகுந்த மூலிகைகளின் வேர்,பூ, பட்டை போன்றவற்றை எரித்தே இதனைத் தயாரித்தார்கள். அதனாலேயே நறுமணத் தைலத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஆதிகாலத்தில் சீனர்கள், இந்தியர்கள், இஸ்ரேலியர்கள், கார்தஜினியர்கள், அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் எனப் பலரும் நறுமணத் தைலத்தை அவர்களின் கலாச்சாரத்திற்குள் எந்தெந்த வகையிலோ நுழைத்தனர்.அது மட்டுமல்ல. மனித சமுதாயத்தின் நாகரிகத்தில் பெரும் பங்கு வகிப்பது நறுமணம்தான்.

நாகரிகத் தொட்டிலும்..நறுமணப் பிறப்பும்..!

மனிதனில் மட்டுமல்ல, அனைத்து விலங்கினங்களிலும் கூட இணையை ஈர்ப்பதற்கு, இணை சேர காந்தமாய் பயன்படுவது நறுமணம்தான்.ஆனால் மனிதன்தான் செயற்கையான நறுமணத்தை தனது சொந்த செயல்பாட்டுக்கு பயன்படுத்தியவன்.. நறுமணத் தைலம் முதன் முதல் தயாரிக்கப்பட்ட இடம் மனித நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்ட மெசபடோமியாதான்.ஆனால் எகிப்தியர்களும் நறுமணத்தைலம் தயாரித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.எப்படி தெரியுமா? எகிப்திய மன்னர்களும், ராணிகளும் நறுமணத் தைலம் பயன் படுத்தியதாக பதிவுகள் உள்ளன. அதே சமயத்தில் எகிப்தில் இறந்த மனிதர்களை பல இலைகள் மற்றும் தைலங்கள் கொண்டு பதப்படுத்தி, அதன் பின்னர் மம்மியாக்கி பிரமிடுகளில் வைத்தனர். அதன் பின் நறுமணத்தைலம் தயாரிப்பைச் செழுமைப் படுத்தி பயன்படுத்தியவர்கள் ரோமானியர்களும், அரேபியர்களும்தான். எகிப்தின் ஆதிகால நறுமணத் தைல பாட்டிலின் வயது 3,000 ஆகும். எகிப்தியர்கள்தான் முதன் முதல் கண்ணாடியிலான நறுமணத் தைல பாட்டிலைக் கண்டுபிடித்தவர்கள். அவர்கள்தான் கண்ணாடியை பொதுவான பயன் பாட்டிற்கு கொண்டுவந்தவர்களும் கூட.

எகிப்தின்.. பண்டைகால.. வேதியல்..!

சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki) நறுமணத்தைலத் தொழிற்சாலை வளாகம்

எகிப்தில் முகத்தை பல வண்ணங்கள் கொண்டு அழகு செய்வதும், மம்மியின் கண் இமைக்கு வண்ணம் தீட்டுவதும் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. அழகுப்பொருளுக்கான காஸ்மெடா என்ற வார்த்தை ரோமானிய அடிமைகளால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்கள், அவர்களது எஜமானர்களை வாசனைத் தைலம் கொண்டு குளிப்பாட்டுவார்களாம். ஆனால் கி.மு. 7,000-4,000 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயுடன் கலக்கப்பட்ட நறுமணச் செடிகளை இணைத்து புதிய கற்கால மக்கள் களிம்பு உருவாக்க பயன்படுத்தியதாய் தெரிய வருகிறது. ஆனால் பச்சைக் களிமண்ணில் கியூனிபாரம் எழுத்துக்கள் உருவாக்கிய பின்னரே, அனைத்து செய்முறைகளும் பதிவு செய்யப் பட்டன. முதல் வேதி விஞ்ஞானி தப்புட்டி பெலாட்டிகல்லிமின் (Thapputi -Belatikallim ) நறுமணத்தைலத் தயாரிப்பும் இப்படி பதிவு செய்யப்பட்டதுதான். எகிப்தில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்களும், பெண்களும் வாசனை மிகுந்த எண்ணெய் மற்றும் களிம்புகளை தங்களின் உடல் வாசனைக்காகவும், தோல் மென்மை பெறவும் தடவிக் கொண்டதாக தெரிய வருகிறது.

முதல் வேதி விஞ்ஞானி..பெண்..! தப்புட்டி பெலாட்டிகல்லிம். .!

சைப்ரஸுல் உள்ள லிம்மோசோல் மாவட்டம் ,

தப்புட்டி பெலாட்டிகல்லிம்( Thapputi -Belatikallim )

மனிதனின் மிக துவக்ககால வேதியல் பதிவு என்பது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிடைத்துள்ளன. மனித நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் மெசபடோமியாவிலேயே,மனிதனின் சுவையான வேதியல் ஈடுபாடு தெரிகிறது. அப்போது வேதியலை விஞ்ஞானமாகப் பார்க்காமல், கலையாகவே பார்த்தனர். உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் தானாம். அடிக்க வராதீர்கள் நண்பா. அதுதான் உண்மை..! இதை நான் சொல்லவில்லை நண்பரே.. . வரலாறு கூறுகிறது. முதன் முதல் வேதியல் தொடர்பான,களிமண் பதிவுகளும், தற்போது கண்டுபிடித்த அந்தக் காலத்திய நறுமணத்தைல தயாரிப்பின் மிச்ச சொச்ச பாத்திரங்களும், பாட்டில்களும், சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki)என்ற இடத்தில் கிடைத்துள்ளன. சைப்ரஸ் தீவு எகிப்துக்கு வடக்கில் மத்திய தரைக்கடலில் காண்ப்படும் பெரிய தீவாகும். இங்கே துவக்ககால மனித செயல்பாடுகளின் பொருட்கள், கி.மு பத்தாயிரம் ஆண்டுகால தொல்பொருட்களாக, நன்றாக பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் இருந்தன. அவை புதிய கற்கால மனிதர்களின் சொத்துக்கள் எனறும் சொல்லப்படுகிறது. அவை அனைத்துக்கும் சொந்தக்காரர் ஒரு பெண் என்றும் தெரிய வருகிறது. எனவே முதல் வேதியியலாளர் ஒரு பெண் என்றும் அந்த தகவல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.அந்தப் பெண் வேதியியலாளர், ஏராளமான பொருள்களைக் கொண்டு, உடலில் தடவும் பலவகையான நறுமணத் தைலத்தை தயாரித்தாராம். அவர் பெயர் தப்புட்டி பெலாட்டிகல்லிம்( Thapputi -Belatikallim ) என்பதாகும். வரலாற்றைத் திருப்பிப் போட்ட பெண் தப்புட்டி.

உலகப் பதிவுகளில் முதன்மையான பெண்கள்..!

சரித்திரப் பதிவுகளின் துவக்கத்திலிருந்தே, பெண்கள் கலாச்சாரத்திலும், நாகரிக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. அதிலும் தப்புட்டி, வேதியல் உலகை மக்களுக்கு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார். அவை எதிர்கால மக்களுக்குப் பயன்படும் படியாகவும் தனது தயாரிப்புகள், அது தொடர்பான மூலப் பொருட்கள்

போன்றவற்றைத் தெளிவாக, பச்சைக் களிமண் பலகைகளில், கியூனிபாரம் எழுத்துக்களில் பதித்து வைத்துள்ளார். அவரை நாம் கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும்.

. கியூனிபாரத்தில்.. தப்புட்டியும்.. தைலம் தயாரிப்பும்..!

பச்சைக் களிமண் பலகையில் கியூனிபாரம் பதிவுகள்

சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki

தப்புட்டி பெலாட்டிகல்லிமின் நறுமணத்தயாரிப்புகள் பற்றி

ஏராளமான தகவல்கள் கியூனிபாரம் பச்சைக்களிமண் பதிவாக பலகைகளில் உள்ளன..! இதுதான் உலகின் மிக,மிகப் பழமையான பதிவு என்றும் கூறப்படுகிறது.இந்த பதிவு மனித நாகரிகத்தின் தொட்டில் எனப்பட்ட மெசபடோமியாவில் இருந்திருக்கிறது. இந்த இடம் தற்போதைய ஈராக்கைச் சேர்ந்ததுதான். தப்புட்டிதான் உலகின் முதல் வேதியியலாளர் என்றும் உலக மக்களால் பல தடயங்கள் மூலமாக பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டும் வருகிறது.வினோதமான, வித்தியாசமான, அற்புதமான பெண்களைப் பற்றி எல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அந்த முதன்மைப் பெண்களில் தப்புட்டியும் ஒருவர். மிகப் பழமையான நறுமணத்தைலம் தயாரித்த இடத்தை சைப்ரசில், 2005 ம் ஆண்டு,தோண்டி எடுத்தனர்.இந்த றுமணத்தைலம் தயாரிப்பு இடம் சுமார் 4,000 ௦௦௦ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் இதுதான் தப்புட்டியின் நறுமணத் தைலத்தொழிற்சாலை என்றும் சொல்லப்படுகிறது.

நறுமணத்தைலத் தொழிற்சாலை வளாகமும்.. மூலப்பொருள்களும்..!

நறுமணத்தைல குடுவைகள்.. 4,000 ஆண்டு வயது

தப்புட்டி வாழ்ந்த காலம் வெண்கல காலத்தின் துவக்கமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.அந்த தைலத் தொழிற்சாலையின் பரப்பு 35,000 சதுர அடி/4,000 சதுர மீட்டர்.. இவ்..ளோ.. பெரிய தொழிற்சாலையாக இருந்தால், அங்கு எவ்வளவு நறுமணத்தைலம் தயாரித்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.இப்படிப்பட்ட தயாரிப்புகள் எல்லாம் வெண்கலக் காலத்தில் நாம் கேள்விப்படாதவை. அந்த தொழிற்சாலை வளாகத்தில் 60 க்கும் மேற்பட்ட தைலம் காய்ச்சி வடிக்கும் கலங்கள், மூலிகை மற்றும் வேர்களைக் கலக்கும் பாத்திரங்கள், வடிகட்டும் புனல்கள், ஏராளமான நறுமணத் தைல பாட்டில்கள், அவைகளை நிரப்பத் தேவையான உபகரணங்கள் போன்றவை அந்தப் பகுதியிலிருந்து கிடைத்துள்ளன. மேலும் ஆதிகால மக்கள், செடிகள், பாதாம், மல்லி,மைர்டில் (Myrrtl) என்ற நறுமணச் செடி, குவிந்த காய் உடைய செடியின் பிசின்(Conifer resin) ,எலுமிச்சை மற்றும் கிச்சிலி போன்ற வாசனைப் பொருட்கள் பயன்படுத்தியே நறுமணத்தைலம் தயாரித்தனர். அப்போது மலர்களைப் பயன்படுத்தவில்லை.

தப்புட்டி பெலாட்டிகல்லிமின்.. திறமை..!

தைலக் குப்பி

தப்புட்டி ஒரு நறுமணத் தைலத் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவர். அந்த மாளிகையின் மேற்பார்வையாளரும் கூட. அவர் அவரது சமகாலத்தவர்களை எல்லாம் விட திறமைசாலியாக முதன்மையாகத் திகழ்ந்தவர். அதானால்தான் உலகின் முதல் வேதியியலாளர் என்று பேசப்பட்டு பாராட்டவும்படுகிறார். தப்புட்டி தைலத் தொழிற்சாலையில் மிகவும் கடினமான பணிகளை எல்லாம் செய்திருக்கிறார். கியூனிபாரம் பதிவுகளில், தான் தயாரித்த நறுமணத் தைலங்களில் உள்ள மூலப் பொருட்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் முறை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார். அவற்றைப் பற்றிப் படிக்கும்போது அவர் தயாரித்த பொருட்கள் மிகவும் அரிதானவை என்றும் தெரிய வருகிறது.

ஆடம்பரம்,பகட்டை..பட்டயம் போட்ட.. நறுமணத்தைலம்..!

கியூனிபாரம் பலகைகள்

நாகரிகத்தின் துவக்க காலத்திலிருந்தே மனித இனம் நறுமணத் தைலத்தை நன்மணம் பரப்ப ,உருவாக்கி உலவ விட்டது என்பதுதான் உண்மை. .அந்த தைலத்திலிருந்து மிதந்து வரும் மென்மையான மணம் என்பது ஒருவரின் செல்வநிலையைத் தம்பட்டம் அடிப்பதாகவும், ஆடம்பரத்தை அறிவிப்பதாகவும்.அவர்களின் சலவைகல் அரங்குகளிலும் தூள் பரத்தியது.அந்த வாசனை..! அரச வம்சத்தினரும்,செல்வச்சீமான்களும், சீமாட்டிகளும்,தான் நறுமணத்தைலத்தில் குளித்து எழுந்தனர். பாமரர்களுக்கு அந்த வாய்ப்பு ஏது? அரசர்கள், செல்வந்தர்கள் பயன்படுத்திய நறுமணத் தைலங்கள் உடலின் மேல் தடவுவதாகவும்/தெளிப்பதாகவும், அல்லது தலையில் தடவுவதாகவும் இருந்தன. இந்த நறுமணத் தைலங்களை எல்லாம் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரித்ததாக தப்புட்டி அதன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

காய்ச்சி வடித்தல். தப்புட்டியின் கண்டுபிடிப்பு..!

4,000 ஆண்டு கடந்த தப்புட்டியின் காய்ச்சி வடித்தல் கலன்

சில நறுமண மூலிகைகள், செடிகள் இவற்றின் மலர்கள், இலைகள் மற்றும் வேர்களைப் போட்டு காய்ச்சி, பின்னர் காய்ச்சி வடித்தல் முறையைப் பயன்படுத்தி தயாரித்துள்ளார். அதனால்தான் நறுமணத் தைலங்கள் தெளிவாக சுத்தமாக பளிச் சென்று உள்ளன. தப்புட்டி, காசித்தும்பை (balsam), கோரைப்புல் (Cyperus) மற்றும் வெள்ளைப்போளம் (myrrh) போன்றவைகளின் மலர்கள், வேர்கள் மற்றும் இலைகள் போன்றவற்றைப் போட்டு தப்புட்டி பெலாட்டிகல்லிம் காய்ச்சி வடிகட்டி, அந்த முறையிலேயே நறுமணத் தைலம் தயாரித்ததை பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர் நிறைய முறை அதில் தண்ணீர் ஊற்றி ஊற்றி பின்னர் அதன் ஆவி மூலம் வடிகட்டியே தைலம் தயாரித்தார்.இதுதான் நறுமணத்தைலம் தயாரிப்பு பற்றிய மிகப் பழமையான தகவல். அவர் நின்னு(Ninu) என்பருடன் இணைந்து ஆராய்ச்சியும் செய்தார். காய்ச்சி வடித்தல் முறையை முதலில் உலகுக்குச் சொன்னவரும் தப்புட்டியே..!

முதல் பதிவான நறுமணத்தைலங்கள்..!

பைய்ர்ட்கோஸ் நறுமணத்தைல தொழிற்சாலை வளாகம்

முதன் முதல் நறுமணத்தைலம் எகிப்தில்தான் இருந்தது என்று சொல்லப்பட்டாலும், நமக்குக் கிடைத்துள்ள பதிவுகளின் படி, மிகப் பெரிய தொழிற்சாலையான பைய்ர்கோசின் (Pyrgos) நறுமணத் தொழிற்சாலைதான் 4,000 வயதானது.அதில் கிடைத்துள்ள நறுமணப் பாட்டில்களில் லேவேண்டர், ரோஸ்மேரி, பைன் மற்றும் மல்லி மணமுடைய நறுமணத் தைலங்கள் கிடைத்துள்ள்ளன. அவை அனைத்தும் ஆல்கஹால் கண்டுபிடிக்கும் முன்பே, காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். ஆல்கஹாலின் வயது 3,000௦௦ தான். பின்னாளில் வந்த அவிசென்னாதான் ஆல்கஹால் கலந்து இந்த முறையைப் பயன்படுத்தி நறுமணத்தைலம் தயாரித்தார்.

பேராசிரியை பெல்ஜியார்னோ &குழுவின் கண்டுபிடிப்பு:

மேலே சொல்லப்பட்ட கதையை நம் முன்னே வைப்பவர்கள் இத்தாலியின் தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் விஞ்ஞானி பேராசிரியை மரிய ரோசரியோ பெல்ஜியார்னோவும், அவரது குழுவினரும்தான். தொல்லியல் துறை விஞ்ஞானி பேராசிரியை மரிய ரோசரியா பெல்ஜியோர்னோ (Maria Rosaria Belgiorno) மற்றும் அவரது குழுவினர்,.சைப்ரஸ் தீவிலுள்ள லிமஸ்ஸோல் மாவட்டத்தில் பைர்கோஸ்(Pyrgos) என்ற இடத்தில் தொல்லியல் இடம் ஒன்று 2005 ல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த இடம் இத்தாலியின் தேசிய ஆராய்ச்சிக் குழுவினருடன் தோண்டி எடுக்கப்பட்டது.அதுதான் சைப்ரஸ் தீவில் பைய்ர்கோசிலுள்ள நறுமணத் தொழிற்சாலை. அந்த இடம் வெண்கலக் காலத்தின் துவக்கததைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. அந்த இடம் ஒரு தொழிற்சாலை வளாகமாக இருந்திருக்கிறது.மேலும் அங்கே ஒயின், நறுமணத்தைலம் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் கருநீல வண்ணம் போன்றவை தயாரிக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அறியப் பட்டுள்ளது. அவ்விடத்தில் மாளிகையின் மிச்ச சொச்சங்களும் இருந்தன.

4,000ஆண்டுகால நறுமணத்தைலம்.. தயாரிப்பு..!

பேராசிரியை மரிய ரோசரியோவும், அவரது குழுவினரும் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இடத்தை சேதாரமின்றி தோண்டி எடுத்தனர். அது மட்டுமல்ல. அந்த நறுமணத் தைலத் தொழிற்சாலையில் கிடைத்த 4 பாட்டில்களில் ஒட்டிக்கொண்டிருந்த நறுமணத் தைலத்தை வைத்துக் கொண்டு, அதிலிருந்து சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நறுமணத் தைலத்தையும் தயாரித்து விட்டனர். அது தொடர்பாகவும், எப்படி அவற்றித் தயாரிப்பது என்பது பற்றியும் பேராசிரியை பெல்ஜியார்னோ ஒரு புத்தகம்மும் எழுதி உள்ளார். பேராசிரியை பெல்ஜியார்னோ ஒவ்வொரு நறுமணத்தைலத்தையும் தயாரிக்க 6 மாதம் ஆயிற்று. அவற்றை அந்த கியூனிபாரம் பலகையில் கூறியுள்ள படியேதான் தயாரித்தார்.

மிச்ச சொச்ச தைலமும்.. புது நாமகரணங்களும்..!

அது மட்டுமின்றி, அங்கே இருந்த பாத்திரங்களிலேயே அவற்றைத் தயாரித்தார். அவற்றிற்கு, அப்ரோடைட் (Afridite), எலினா (Elena), ஆர்ட்டிமிடிஸ் (Artemides) மற்றும் எரா (Era) என்றும் பெயர் சூட்டினார். அப்ரோடைட் தைலத்தில் ஆலிவ் எண்ணெய், லாரல், கொத்தமல்லி மற்றும் டர்பண்டைன் இணைந்து இருந்தன. ஆர்ட்டிமிடிஸில் பாதாம், நறுமணச் செடி மைர்ட்ல் (Myrrtl), பார்ஸ்லி (Parseley) மற்றும் டர்பண்டைன் இருந்தன. எராவில் ஆலிவ் எண்ணெய், ரோஸ்மரி (Rosemary), பச்சை சோம்பு மற்றும் லாவண்டர் இருந்தது.

பழமை போன்ற புதுமை தயாரிப்பு..!

பேராசிரியை பெல்ஜியார்னோ இந்த நறுமணத்தைலம் பற்றிச் சொல்லும் கருத்தாவது. “இப்படி ஒரு செய்முறை இந்த காலத்தில் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் என்பது கற்பனை செய்ய முடியாத, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம் என்பதே” அவர் கருத்து. தப்புட்டி செய்த்தைவிட. அவரின் செய்முறையை கியூனிபாரம் பலகைகளிலிருந்து படித்து, அந்த முறையிலேயே, பழமைவாய்ந்த நறுமணத்தைலம் தயாரித்த பேராசிரியை பெல்ஜியார்னோயும் அவரது குழுவினரும் பெரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்.

காய்ச்சி வடித்தல்.. தப்புட்டியின் செய்முறை

எகிப்தில் அல்லித் தைலம் தயாரிப்பு

காய்ச்சி வடிக்கும் கலன்கள்